Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

திருமொழியான்

நானும் கருத்து சொல்லிக்கிறேனே!

இன்னொரு கண்ணன் பாட்டு

&posturl=http://thirumozhian.blogspot.com/2007/05/blog-post.html&cmt=4&blogurl=http://thirumozhian.blogspot.com/&photo=">



தூள் படப் பாடலை 'இது கண்ணன் பாட்டா இல்லையா' என்று ஒரு பதிவர் கலாய்த்திருந்தார். அதைப் படித்தவுடன் எனக்கும் ஒரு பதிவு போடலாமென அரித்தது. இங்கே சொறிந்துகொள்கிறேன்.

ஆத்திக நாத்திக விஷயங்களில் அடிக்கடி நாயடி பேயடி அடித்துக்கொள்ளும் நானும் என் நண்பனும் பறிமாறிக்கொண்ட மின்மடல் இது. நான் நாத்திகன். என் நண்பன் ஆத்திகன்.

நண்பனின் மடல்:


குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா -
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

வேத உருவானவனே (மறைமூர்த்தி) கண்ணா...எனக்கு எந்தக் குறையும் இல்லை. பசுக்களை (உயிர்களை, எங்களை) மேய்ப்பவனாய் (காப்பவனாய்), கோவிந்தனாய் நீயிருக்கும் போது எனக்கு எந்தக் குறையும் இல்லை.

எல்லா இடத்திலும் நீ நிறைந்து ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறாய் கண்ணா...அதனால் என்ன...நீ எங்கும் இருக்கிறாய் என்னைக் காப்பதற்கு...அது போதும் எனக்கு. எந்தக் குறையும் இல்லை எனக்கு. நான் எது கேட்டாலும் கொடுப்பதற்குத் தயாராய் வேங்கடேசன் ஆகிய நீயிருக்கும் போது எனக்கு வேறு என்ன வேண்டும் உன்னைத் தவிர...வேதங்கள் சொல்லும் மெய்ப்பொருளே கண்ணா...நீலமணி போன்ற மேனி வண்ணம் கொண்டவா...திருமலையில் நிற்கும் என் அப்பா...என்னைக் காப்பவனே கோவிந்தா...

மாயமாய் திரையின் பின்னால் நிற்பது போல் மறைந்து நிற்கிறாய் கண்ணா...உன்னை இரகசியமான மறைப்பொருளை அறிந்த ஞானியர் மட்டுமே உள்ளங்கை நெல்லிக்கனி போல் காண்கிறார்...என்றாலும் எனக்கு எந்தக் குறையும் இல்லை கண்ணா...நீ திருமலையின் மேல் கல்லாய் நிற்கின்றாய்...அது போதும் எனக்கு...நான் உன்னை நன்றாக தரிசனம் செய்து கொள்கிறேன். எனக்கு எந்தக் குறையும் இல்லை மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா...

வேறு யுகங்களில் மக்கள் உன்னை தவம், தியானம், யாகம் போன்ற பலவற்றைச் செய்து கண்டனர். இந்த கலியுகத்திலோ மக்களால் அதையெல்லாம் எளிதாய் செய்யமுடியாது... அதனால் எங்களுக்கு இரங்கி நீ கற்சிலையில் இறங்கி நிலையாக திருமலைக் கோவிலிலே காட்சி தருகிறாய்... அழகிய சுருள்முடியை உடைய கேஸவா... மலையப்பா...நீ எது கேட்டாலும் இல்லை என்று சொல்வதில்லை...உன் மார்பில் எது கேட்டாலும் கொடுப்பதற்கு நிற்கும் கருணைக்கடலாகிய அன்னை மஹாலக்ஷ்மி இருக்கும் போது...நான் செய்த புண்ணிய பாபங்களைப் பார்த்து நீ கூட சில நேரம் நான் கேட்பதைத் தர யோசிக்கலாம்...ஆனால் அன்னையோ அப்படி அல்ல...அவள் கருணைக்கடல்...என் தகுதியையும் பாராமல் எது கேட்டாலும் தருவாள்...அப்படி இருக்கும் போது எனக்கு என்ன குறை இருக்க முடியும். எந்தக் குறையும் இல்லை கண்ணா... மணிவண்ணா... மலையப்பா... கோவிந்தா...கோவிந்தா....
Ithu than pattoda arththam,nee sonna arthathayum ithayum compare panni paaru.

எனது மறுமொழி:

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா! கண்ணா!

மலைகளில் (மலையப்பா) மாடுகளை (கோவிந்தா) மேய்த்துத் திரிந்த உன்னிடம் எனது குறைகளைச் சொல்லி என்ன பயன்? உன்னைப் போய் மறை மூர்த்தி என்று சொல்லுகிறார்கள். ஆகவே எனக்கு ஒரு குறையும் இல்லை என்றே உன்னிடம் சொல்ல வேண்டியிருக்கிறது!

நீ வேண்டியவர்களுக்கு வேண்டிய படித் தந்தருள்வாய் என்று ஒரு வழக்கு இருக்கிறது. அது அப்படியே இருக்கட்டும் (என்றிருக்க)! நான் உன்னிடம் எதையாவது வேண்ட, நீயோ என்னைச் சோதிக்கிறேன் பேர்வழி என்று இறங்கிவிட்டால் பின்பு, கண்ணா, 'உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா' என்று ஆகிவிடும். ஆகவே மறை மூர்த்தியே, எனக்கு ஒன்றும் வேண்டாம். ஆளைவிடு!

நீ வகுத்ததாகக் கூறப்படும் வேதங்களை ஓதிக்கொண்டு, இல்லாத உன்னைக் கண்ணாரக் கண்டதாக சொல்லும், தவம் என்ற பெயரில் உட்கார்ந்தே பொழுதைக்கழிக்கும் சோம்பேறி 'ஞானிகள்' சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள் (மறைமூர்த்தி & மறை ஓதும்). நீ திரையின் பின் நின்றாலும், சுவற்றின் பின் நின்றாலும் அல்லது நில்லாமலே போனாலும் அது பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை.

ஒரு குன்றின் மேல் கல்லை நட்டுவிட்டு 'நீ' என்கிறார்கள். ஆனால் நீ எங்கும் வாராதவன் (வரதா) என்று பாவம் அவர்களுக்குத் தெரியவில்லை. கல் எப்போதும் போல் நின்றுகொண்டிருக்கிறது. அதனிடம் அருள் எப்படிக் கிடைக்கும்?

உனது கை கால்களைக்கூட அசைக்க முடியாது நிலையாக நின்று கொண்டிருக்கிறாய். இந்தக் கலிகாலத்தில் எங்களுக்காக மனமிறங்கி அருள் புரியச் சிலை வடிவில் நிற்கிறாய் என்று சமாதானம் கூறுகிறார்கள். ஆனால் உன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை நான் இதற்கு முந்தைய அடியிலேயே எனது பாட்டில் கூறிவிட்டேன். நீ எங்களை கவனிப்பதை விட உனது கூந்தலையே(கேஸவா) அதிகம் கவனித்துக்கொள்கிறாய் என்பது எப்போது இந்த மக்களுக்குப் புரியப்போகிறதோ? கண்ணன் இல்லை என்று நான் யாரிடம் சொனனாலும் அதை எவரும் நம்பப் போவதில்லை (யாரும் மறுக்காத). இல்லாத உன்னைத் துதிக்க என்னிடம் நேரமும் இல்லை.

அதிகாலையில் எழுந்து கோலம் போட்டுச் சுத்தமாக வீட்டினை வைத்திருக்கும் பெண்களைத் திருமகள்(மஹாலக்ஷ்மி) என்று கூறுவார்கள். சுறுசுறுப்பாய் இருந்தால் முன்னேற்றமும் செல்வமும் வாராதா பின்னே?

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாளாது உஞற்று பவர்

தெய்வத்தா னாகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

என்கிற அய்யன் திருவள்ளுவனின் வாக்குகிணங்க நான் பாடுபட்டால், உன் மார்பில் குடியிருப்பதாக உருவகப்படுத்தப்படும் திருமகள் எங்களுக்கு வேண்டியதை எல்லாம் கொடுக்கமாட்டாளா என்ன?

4 மறுமொழிகள்:

Blogger குமரன் (Kumaran) said...

நல்ல மாற்றுப் பார்வை திருமொழியான். இரசித்தேன்.

3:42 AM  

Blogger குமரன் (Kumaran) said...

உங்க நண்பர் யாருங்க? அடியேன் 1 1/2 வருடங்களுக்கு முன்னால் எழுதிய இடுகையை எடுத்து உங்களுக்கு அனுப்பியிருக்கிறார்?

http://koodal1.blogspot.com/2005/10/blog-post_15.html

3:45 AM  

Anonymous Anonymous said...

இதுதான் நெகட்டிவ் திங்கிங்னு சொல்றதா :)

4:00 AM  

Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உன்னிடம் எதையாவது வேண்ட, நீயோ என்னைச் சோதிக்கிறேன் பேர்வழி என்று இறங்கிவிட்டால் பின்பு, கண்ணா, 'உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா' என்று ஆகிவிடும். ஆகவே மறை மூர்த்தியே, எனக்கு ஒன்றும் வேண்டாம். ஆளைவிடு!//

உலைவின்றித் தாளாது உஞற்றி, (இது தான் சோதனை)
சோதனை அதற்குப் பின் வரப்போகும் சாதனைகளும் எனக்கு ஒன்றும் வேண்டாம். ஆளைவிடு! என்று சொல்ல முடியவில்லையே! :-)
உழைப்பே உயர்வு!
சோதனையே சாதனை!
எனக்குச் சாதனை வேண்டும். அதனால் நீ சோதித்துக் கொள் இறைவா! :-))

//நீ திரையின் பின் நின்றாலும், சுவற்றின் பின் நின்றாலும் அல்லது நில்லாமலே போனாலும் அது பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை//

அதானே!
கருவாய், உயிராய், கதியாய், விதியாய், அணுவாய், அணுத்துகளாய் நீ எங்கு நின்றாலும் எனக்கென்ன கவலை?
எனக்கு அணுவில் இருந்து அணுசக்தி வந்து அது உலகுக்குப் பயனுள்ளதாய், உலகெலாம் தழைத்தாலே போதும்! அது உன்னால் வந்தால் என்ன? என்னால் வந்தால் என்ன? :-)
வந்தால் சரி.
வரட்டும், வரும்!
வருக வருக! :-)

மாற்றுப் பார்வை அருமை திருமொழியான்!
தொடர் மாற்றுப் பார்வை தொடரட்டும், இரு நண்பர்களிடையேயும்!

10:02 AM  

Post a Comment

<< முகப்பு